டாட்ரா வாகன கொள்முதல் விவகாரத்தில் பிஇஎம்எல் தலைவ நடராஜன் சஸ்பெண்ட்
டெல்லி: ராணுவத்துக்கு டாட்ரா ரக வாகனங்களை கொள்முதல் செய்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பிஇஎம்எல் (பாரத் எர்த் மூவர்ஸ்) நிறுவனத்தின் தலைவர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராணுவத்தின் தலைமை தளபதியாக வி.கே.சிங் பொறுப்பு வகித்த போது தரம் குறைந்த டாட்ரா ரக வாகனங்களை வாங்க நிர்பந்தித்து ரூ14 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராணுவத்துக்கு வாகனங்களை கொள்முதல் செய்து தரும் மத்திய அரசின் பிஇஎம்எல் நிறுவனத்துக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.
தற்போது இது பற்றி விசாரணை நடத்தி வரும் சிபிஐ, பிஇஎம்எல் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் ராணுவ தளபதிக்கும் பிஇஎம்எல் தலைவருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்தது. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் வி.கே.சிங் பிஇஎம்எல் தலைவர் நடராஜன் மீது புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சிங் மன்னிப்பு கேட்கக் கோரி நடராஜன் வக்கீல் நோட்டீஸும் அனுப்பியிருந்தார். ஆனால் நடராஜனின் இந்த நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கவில்லை.
இந்நிலையில் டாட்ரா ரக வாகன கொள்முதல் தொடர்பான விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதற்காக நடராஜனை சஸ்பெண்ட் செய்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.