அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை உடனே அகற்ற மதுரை கலெக்டர் உத்தரவு
மதுரை: அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை சம்பந்தப்பட்ட நபர்கள் உடனே தானே முன்வந்து அகற்ற வேண்டும் என மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளன. விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என்றால் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் உரிமம் பெற்று அதற்குரிய தொகையை அரசுக்கு செலுத்திய பின்பு தான் வைக்க வேண்டும். இந்த விதிமுறையை தமிழக அரசு கடந்த 2003ம் ஆண்டு முதல் கட்டாயப்படுத்தியுள்ளது.
ஆனால் மதுரை மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் அனுமதி இன்றி தனி நபர்கள் விளம்பரப் பலகைகள் வைத்துள்ளனர். இது அரசு விதிகளுக்கு புறம்பானதாகும்.
எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் விளம்பரப் பலகைகளை தானே முன் வந்து ஒரு வார காலத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் சம்பத்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விளம்பரப் பலகைகள் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்படும். இதற்கான செலவினத் தொகை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.