தந்தையின் அரிவாளுக்கு பயந்து காதல் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்ட பெண் என்ஜினியர்
சென்னை: தன்னையும், தாயையும் அரிவாளால் வெட்டிவிடுவேன் என்று தந்தை மிரட்டியதால் திருமணமான ஒரே மாதத்தில் விவகாரத்து கோரிய பெண்ணின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு புதுமணத் தம்பதிகளை சேர்த்தும் வைத்தார்.
ஈரோட்டை சேர்ந்தவர் சுமதி. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் ரவி (இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). அவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியர்களாக பணியாற்றியபோது காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் அவர்களின் காதல் விவகாரம் பற்றி தெரிய வந்த அவர்களின் பெற்றோர் சமுதாய வேற்றுமையைக் காரணம் காட்டி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் யாருக்கும் தெரியாமல் ராயபுரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணமத்திற்கு பிறகு 29 நாட்கள் சென்னையில் குடித்தனம் நடத்தினர். அப்போது சுமதியின் அப்பா சென்னைக்கு வந்து அவரை ஈரோட்டுக்கு வந்துவிட்டு செல்லுமாறு கூறி அழைத்துச் சென்றார்.
ஊருக்கு போன சுமதி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். பதிவு திருமணம் செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று ரவி மிரட்டியதால் தான் அவரை மணந்ததாக அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கேள்விகள் கேட்கையில் சுமதி அழத் தொடங்கிவிட்டார். ஊருக்கு அழைத்துச் சென்ற தந்தை தன்னையும், தனது தாயையும் அரிவாளால் வெட்டிவிடுவேன் என்று மிரட்டியதால் தான் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாகக் கூறி கதறினார்.
இதையடுத்து அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சுமதியையும், ரவியையும் தகுந்த பாதுகாப்புடன் அவர்களின் ராயபுரம் வீட்டில் விட்டுவிட்டு வருமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சுமதி கணவருடன் சென்றார்.












Click it and Unblock the Notifications