அமெரிக்க ஹோமோ மாணவன் தற்கொலை: தமிழக மாணவர் நாடு கடத்தப்படமாட்டார்
தமிழரான தருண் ரவி (20) கடந்த 2010ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்தார். ரவியின் அறையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டெய்லர் கிளமென்ட் என்ற மாணவரும் தங்கி படித்து வந்தார். இவர் வேறு நபருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை தருண் ரவி தனது வெப் கேமரா மூலம் அவருக்கு தெரியாமல் படம் பிடித்தாகவும், அது குறித்து டிவிட்டர்' இணையதளத்தில் தகவல் வெளியிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
அந்த வீடியோ படத்தை பார்த்து மனவேதனையும், அவமானமும் அடைந்த கிளமென்ட் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து தருண் ரவி மீது நியூஜெர்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தருண் ரவிக்கு 30 நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் நியூ ஜெர்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
நன்னடத்தை காரணமாக 30 நாட்கள் தண்டனை 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று விடுதலையாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருணின் தந்தை ஒரு சாப்ட்வேர் என்ஜினியர். இவர் 15 ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.