வரலாறு காணாத குழப்பத்தில் பாஜக...!- கூட்டத்தோடு சேர்த்து முடிவையும் தள்ளிப் போட்டது!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் என்ன நிலை எடுப்பது என்று தெரியாமல் மிகப் பெரிய அளவில் தேசிய ஜனநாயக்க கூட்டணி குழம்பிக் கிடக்கிறது. பாஜகவால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. இன்று ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று இருந்த தேசிய ஜனநாயகக் கட்சி தனது ஆலோசனைக் கூட்டத்தை திடீரென தள்ளிப் போட்டு விட்டது.

ஒன்று பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும், இல்லாவிட்டால் சங்மாவை ஆதரிக்க வேண்டும்.அதுவும் இல்லாவிட்டால் கம்மென்று சும்மா இருக்க வேண்டும். இந்த மூன்றே மூன்று வழிகள் மட்டுமே பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் முன்பு உள்ளன. ஆனால் எந்த வழியை 'சூஸ்' செய்வது என்பதில் இவர்களுக்கிடையே குழப்பம் தலைவிரித்தாடி வருகிறது.

பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சியும், அப்துல் கலாமை மமதாவும் அறிவித்த பின்னர் கடந்த 17ம் தேதி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கலாமை ஆதரிக்கலாம் என சிலரும், பிரணாப்பை ஆதரிக்கலாம் என சரத் யாதவ் உள்ளிட்ட சிலரும் மாறி மாறிப் பேசியதால் முடிவை விட்டு விட்டனர்.

இந்த நிலையில் இன்று கூடி நிலைப்பாட்டை இறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டிருந்தது. ஆனால் இன்று கூட்டமே நடக்கவில்லை, தள்ளிப் போட்டு விட்டனர்.

இந்த விவகாரம் குறித்து மூத்த தலைவர் அத்வானி முன்பு பேசுகையில், நிச்சயம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது. ஆனால் யாரை ஆதரிப்பது என்பது குறித்து எங்களால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் வலிமையை நாங்கள் நிச்சயம் நிரூபிப்போம் என்றார்.

பிரணாப் முகர்ஜிக்கு கடும் போட்டி தர வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் வலுவான வேட்பாளர் இல்லையே என்பதே அதன் குழப்பத்திற்குக் காரணமாக கூறப்படுகிறது. அதேசமயம், 2014 லோக்சபா தேர்தலையும் அது மனதில் வைத்து எந்த முடிவையும் எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது. அதாவது சங்மாவை ஆதரித்தால், அதிமுக, பிஜூ பட்நாயக் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் வாய்ப்பு அதற்குக் கிடைக்கும். சங்மாவை விட்டு விட்டு வேறு வேட்பாளரை நிறுத்த தீர்மானித்தால் இந்தக் கட்சிகள் கிடைக்காமல் போகலாம். அதேசமயம், சரத் யாதவ் கட்சி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக இருப்பதால் அதுவும் பிய்த்துக் கொண்டு போகும் நிலை ஏற்படும்.

ஏற்கனவே சிவ சேனா கட்சி பிரணாப்புக்கு ஜே ஜே போட்டு விட்டது. இந்தப் பக்கம் எதியூரப்பா வேறு பிரணாப்புக்கு ஆதரவு என்று திகிலை ஏற்படுத்தி வைத்துள்ளார். எனவே இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலால் பாஜக உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய முதல் கடமையிலும், அவசரத்திலும் அந்தக் கட்சி உள்ளது.

மொத்தத்தில் தற்போது மமதா பானர்ஜி எப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரோ, அதே போலத்தான் பாஜகவும் தனிமைப்படுத்தப்பட்டு காணப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் அனைவருமே பிரணாப்புக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஆனால் பாஜகவுக்கு பிரணாப்பை ஆதரிப்பதில் தயக்கம் உள்ளது. இதுதான் குழப்பத்திற்குக் காரணம்.

ஒரு வேளை அப்துல் கலாம் போட்டியிட சம்மதித்திருந்தால் நிலைமையே வேறு மாதிரியாக போயிருக்கும், பிரணாப் முகர்ஜிக்கு கடும் போட்டியைக் கொடுத்திருக்கலாம், நமக்கும் ஆதாயம் கிடைத்திருக்கும், கூடவே மமதாவின் புதிய கூட்டணியும் கிடைத்திருக்கும் என்று ஏமாற்றத்துடன் கூறுகிறார்கள் பாஜகவினர்.

தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவு என்பது, இடதுசாரிகள் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்தே உள்ளது என்று மட்டும் தெரிகிறது.

முதலில் காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்கட்டும் என்று பாஜக கூறி வந்தது. பிறகு மமதா பானர்ஜியின் அணுகுமுறைக்கு என்ன ஆதரவு இருக்கிறது என்று பார்த்தார்கள். இப்போது இடதுசாரிகள் என்ன நிலை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கப் போவதாக பாஜக தரப்பில் கூறுகிறார்கள். ஒரு வேளை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு, யாருக்காவது ஆதரவு கொடுத்திருக்கலாமோ என்று ஆராய பாஜக நினைக்கிறதோ என்னவோ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+