பவார் சொன்ன பேச்சை கேட்காத பி.ஏ.சங்மா தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா!
காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். ஆனால், இந்தக் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான பி.ஏ.சங்மா தானும் போட்டியிடப் போவதாகக் கூறி வருகிறார்.
இதையடுத்து அவரை போட்டியிலிருந்து விலகுமாறும் இல்லாவிட்டால் கட்சியை விட்டு நீக்குவோம் என்றும் பவார் எச்சரித்திருந்தார்.
ஆனாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆதரவோடு களத்தில் குதித்த சங்மா, இப்போது தன்னை பாஜக கூட்டணியும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுள்ளார்.
அப்துல் கலாம் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டதையடுத்து சங்மாவுக்கு அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
ஆனால், தினமும் கூடி டீ, பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் கூட்டத்தை கலைத்து வருகிறது பாஜக கூட்டணி. இதுவரை ஒரு டஜன் மீட்டுங்குகள் நடந்து முடிந்தாலும் உருப்படியான முடிவை எடுக்க முடியாத அளவுக்கு பாஜகவிலும் பாஜக கூட்டணியிலும் குழப்பங்கள் நீடிக்கின்றன.
இதையடுத்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கூட்டணியின் முக்கியக் கட்சியான சிவசேனா, பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக கூறிவிட்டது. கர்நாடகத்தில் சிபிஐ வழக்குகளை எதிர்நோக்கி வரும் எதியூரப்பா, கட்சி இன்னும் முடிவெ எடுக்காத நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக சொல்லிவிட்டார்.
இந் நிலையில் சரத் பவாரால் கட்சியை விட்டு நீக்கப்படும் அபாயத்தில் இருந்த சங்மா, இன்று கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துவிட்டார். அதை படித்துக் கூட பார்த்தாரோ இல்லையோ உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டார் சரத் பவார்.
இதன்மூலம் சங்மா எப்போது இடத்தை காலி செய்வாரோ என்ற ஆதங்கத்தில் பவார் இருந்தது தெளிவாகிறது.
முன்னதாக சங்மா ராஜினாமா செய்யப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தான் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சங்மாவின் மகள் அகதா சர்மா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் எம்பியாக வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராக உள்ளார். சங்மாவின் ராஜினாமா காரணமாக, அவரும் விரைவில் பதவி விலகலாம் என்று தெரிகிறது.