''இல்லாத ஆடுகளுக்காக பிரச்சனை செய்யாதீர்கள் என்கிறார் ஜெ'': கருணாநிதி
சென்னை: அதிமுக அரசுக்கு திமுகவினரை பழிவாங்கவே நேரம் போதவில்லை. அப்படி இருக்கையில் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: அதிமுக ஆட்சியில் விலைவாசி பற்றிய விளக்கம்?
பதில்: சில்லரை மார்க்கெட்டில், அனைத்து ரக அரிசிகளும் மேலும் 200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இன்னும் நான்கு மாதங்களுக்கு இந்நிலை நீடிக்கும் என அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர். சர்க்கரை மூட்டைக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. இதைப்பற்றி யாருக்கு கவலை? திமுக மீது காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கிடும் போக்கும் மேலோங்கி இருக்கும்போது, பொது பிரச்சனைகளைப் பற்றிய கவலை ஆளுபவர்களுக்கு எப்படி வரும்?
கேள்வி: கழக ஆட்சியில் கட்டப்பட்ட பல கட்டிடங்களைத் திறக்காமல் போட்டிருப்பதாகச் சொல்கிறார்களே?
பதில்: சென்னையில் காவல்துறை கமிஷனர் அலுவலகம் ஒன்று கட்டி முடிந்து விட்டதாகவும், திறப்பு விழா தேதி கிடைக்காமல் திறக்காமல் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இன்றைய செய்தியிலே கூட திருநெல்வேலியில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம் அரசியல் போட்டியால் பல நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது என்று புகைப்படத்தோடு செய்தி வெளிவந்துள்ளது. ஒருவேளை அங்கும் ஏதாவது மருத்துவமனை தொடங்கப்படும் என்று சொல்கிறார்களோ என்னவோ?
கேள்வி: ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து விட்டதாக செய்தி வந்திருக்கிறதே?
பதில்: கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது மீனவர்களின் பிரச்சனை குறித்து மத்திய அரசுக்கு எத்தனையோ முறை நாம் வேண்டுகோள் விடுத்தும், அவர்களும் முயற்சித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நின்றபாடில்லை. தற்போது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தது பற்றி வாயே திறக்கவில்லை. கழக ஆட்சியின்போது கேள்வி கேட்டு வாய் நீளம் காட்டியவர்கள் எல்லாம் இன்று கேளாக் காதினராயும், வாய் மூடி மவுனிகளாயும் மாறி விட்டார்கள்.
கேள்வி: பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருவதாக செய்திகள் வருகின்றனவே?
பதில்: திருப்பூருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரளா புதிதாக அணை கட்டினால் நீர்வரத்து முற்றிலும் குறைந்து திருப்பூர், கோவை மாநகராட்சிகள், மேட்டுப்பாளையம் நகராட்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பேரூராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும் ஈரோடு மாவட்டத்தின் பாசனமும் பாதிக்கப்படும். இப்படி அணைகள் கட்டி தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்தையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்க முனையும் கேரளாவின் முயற்சிக்கு தமிழக அரசு தடுப்பணை கட்ட முன் வருமா?.
கேள்வி: அ.தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் பரபரப்பாக அறிவிக்கப்பட்ட விலையில்லா ஆடுகள் திட்டம் நடக்கிறதா?
பதில்: ஓ! நடக்கிறதே! நேற்று கூட அதைப்பற்றி செய்தி வந்திருக்கிறதே; அதன் தலைப்பு என்ன தெரியுமா? "அரசின் விலையில்லா ஆடுகள் கசாப்பு கடையில் விற்பனை" என்பதுதான். இந்தத் தலைப்பின் கீழ் புகைப்படமும் வெளிவந்துள்ளது. அந்தப் புகைப்படத்தின் கீழே, "தேனி மாவட்டம் போடியில், கசாப்பு கடையில் விற்கப்பட்ட, அரசின் விலையில்லா ஆடுகள் காதில் அடையாள நம்பர் முத்திரை உள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த ஞாபகத்தில்தான் திருவேற்காட்டில் பேசும் போது "இல்லாத ஆடுகளுக்காக பிரச்சனை செய்யக் கூடாது" என்று கதை சொல்லியிருக்கிறார் போலும்!.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.