ஈக்வடார் நாட்டில் புகலிடம் கோரும் ஜூலியன் அசான்ஜ்: இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தல்!
லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்துக்குச் சென்ற அசான்ஞ், அந் நாட்டில் குடியேற அனுமதி கோரியுள்ளார். அவரது கோரிக்கையை ஈக்வடார் நாடு பரிசீலித்து வரும் நிலையில், தூதரகத்தை விட்டு அசான்ஞ் வெளியில் வரவில்லை.
அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையகத்துக்கு அந் நாட்டின் தூதரகங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பிய ரகசிய தகவல்களை கைப்பற்றி அதை தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியில் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தினார் அசான்ஞ்.
இதையடுத்து அவரது வங்கிக் கணக்குகள், நிறுவன வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டுகளை அமெரிக்காவும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் முடக்கின. இதனால் இணையத்தளமே மூடப்படும் நிலைக்குச் சென்றது.
மேலும் அசான்ஞ் மீது அடுக்கடுக்கான வழக்குகளும் போடப்பட்டன. ஸ்வீடனில் ஒரு பெண்ணை கற்பழித்ததாகவும் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து அவரை ஸ்வீடனுக்கு அனுப்ப இங்கிலாந்து முயற்சித்தது. ஆனால், அதை எதிர்த்து அசான்ஞ் தொடர்ந்த வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இதனால் எந்த நேரமும் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சூழல் உள்ளது.
இந் நிலையில் தனக்கு 2010ம் ஆண்டிலேயே புகலிடம் தர முன் வந்த ஈக்வடார் நாட்டின் உதவியை அசான்ஞ் நாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான அசாஞன்சுக்கு அந் நாடு உதவி ஏதும் செய்ய முன் வராத நிலையில், அவர் ஈக்வடாரின் உதவியைக் கோரியுள்ளார். தான் ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால் அந் நாடு தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடும் என்பதால், அதைத் தவிர்க்க அசான்ஞ் முயற்சித்து வருகிறார்.
இதற்கிடையே அசான்ஞ்சுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆவணங்களைத் தந்ததாக அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனிங் கைது செய்யப்பட்டு விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.