பூத்துக் குலுங்கிய சூரியகாந்தி பூக்கள்: பூரிப்பில் விவசாயிகள்
வானம் பார்த்த பூமியான சங்கரன்கோவில் பகுதியில் கிணறு, கண்மாய், குளத்து நீரை நம்பி மணவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கோடை மழை பொய்த்து போனதால் இப்பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் குறைந்த செலவில் அதிக வருவாய் தரும் எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி சாகுபடிக்கு மாறினர். 90 நாட்கள் முதல் 100 நாட்களில் பலன் தருவதாலும் குறைந்த அளவே தண்ணீர் தேவை என்பதாலும் இப்பகுதி விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய யூனியன்களுக்கு உட்பட்ட மலையான்குளம், சிதம்பரபுரம், செவல்குளம், வாகைககுளம், அழகனேரி, பெரும்கோட்டூர், ஆலமாதாபட்டி, திருவேங்கடம், ஆலங்குளம், பழங்கோட்டை, சாயமலை, பனவடலிசத்திரம், மூவிருத்தாணி, ஆராயச்சிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சூரியகாந்தி விதையை விளையும் இடத்திற்கே வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் போக்குவரத்து செலவும் மிச்சமாக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். சங்கரன்கோவில் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சூரியகாந்தி செடிகள் அனைத்தும் தற்போது பூத்து குலுங்குவதால் இப்பகுதியே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.