கல்வி உதவித் தொகை: பிரபல நடிகர் பெயரைச் சொல்லி மாணவி கடத்தல்
திருச்சி: பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் பெயரைச் சொல்லி ஏழை மாணவியைக் கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தெற்கு அயித்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சேகர். அவரது மனைவி சம்பந்தி. அவர்களுக்கு சரண்யா (18) என்ற மகள் உள்ளார். அவர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் கடந்த 15ம் தேதி நாமக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பம் வாங்கிக் கொண்டு பேருந்தில் முசிறி திரும்பினார். அப்போது அதே பேருந்தில் வந்த ராகவாபாண்டி என்ற வாலிபர் சரண்யாவிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். சரண்யா கல்லூரியில் சேர ஆசைப்படுவதை அறிந்த அந்த வாலிபர் சென்னை வடபழனியில் உள்ள தனது சகோதரர் பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸிடம் கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவார். அவரை வைத்து நான் உனக்கு கல்வி உதவித் தொகை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய சரண்யா பாண்டியை தனது பெற்றோரிடம் அழைத்துச் சென்றார். பாண்டி சரண்யாவிடம் சொன்னதையே அவரது பெற்றோரிடமும் தெரிவித்தார். சரண்யாவின் பெற்றோரும் பாண்டியின் வார்த்தையை நம்பிவிட்டனர். இதையடுத்து பாண்டி 2 நாட்களாக சரண்யா வீட்டுக்கு சென்று அவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளார்.
இதையடுத்து கடந்த 18ம் தேதி முசிறியில் உள்ள வங்கியில் சரண்யா பெயரில் கணக்கு தொடங்க வேண்டும் என்று கூறி அவரை அழைத்துச் சென்றார். ஆனால் இரவாகியும் சரண்யா வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாய் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முசிறி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழ்ககுப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
பாண்டி கொடுத்த செல்போனைத் தொடர்பு கொண்டால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அந்த எண் நாகப்பட்டினம் முகவரி கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் நாகப்பட்டினம் விரைந்துள்ளனர்.