இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்கிறார் பிரணாப் முகர்ஜி!
பதவி விலகும் முன் அவர் சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி முன் வைத்துள்ள சில முக்கியமான கட்டுப்பாடுகளை அவர் அமலாக்குவார் என்று தெரிகிறது.
அரசின் வீண் செலவுகளைக் குறைப்பதோடு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் திட்டத்தையும் அறிவிப்பார் என்று தெரிகிறது. மேலும் என்ஆர்ஐ இந்தியர்களுக்காக சிறப்பு குறுகிய கால பத்திரங்களும் வெளியிடப்பட்டு அவர்களது முதலீட்டை இந்தியாவில் அதிகரிக்கவும் பிரணாப் திட்டமிட்டுள்ளார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு வரும் டாலரின் அளவு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டாலருக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக ரூபாயின் மதிப்பு சரிவதையும் ஓரளவுக்குத் கட்டுப்படுத்த முடியும்.
பிரணாப் முகர்ஜி பதவி விலகும் நேரத்தில் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களைக் குறைத்து சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் செயல்களில் இறங்கலாம் என்றும் தெரிகிறது.
இன்று கூடும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அவர் தனது செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். நாளை தனது மத்திய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
இதையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்யவுள்ளார். வரும் ஜூலை 19ம் தேதி ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு நடக்கவுள்ளது.
கடந்த 1978ம் ஆண்டு முதல் காங்கிரஸ் செயற்குழுவில் பிரணாப் உறுப்பினராக உள்ளார் என்பதும், மத்திய அரசு எடுத்த பல்வேறு முடிவுகளை இந்த செயற்குழு தான் தீர்மானத்துள்ளது என்பதும், அதில் பிரணாப் மிக முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியல் சட்டம், பல்வேறு மாநில அரசியல் விவகாரங்கள், கூட்டணி விவகாரங்கள், காங்கிரஸ் வரலாறு, மத்திய-மாநில உறவுகள் என எல்லா சப்ஜெக்ட்களிலும் வல்லுனர் பிரணாப்.