ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடரும்- சுப்ரீம் கோர்ட்

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முதல் முறையாக கடந்த ஆண்டு 2 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார் ஜெயலலிதா. தற்போது சசிகலா வாக்குமூலம் அளித்து வருகிறார்.
ஆரம்பத்தில் தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வந்த சசிகலா, கேள்விகளுக்குப் பதில் தர அதிகம் நேரம் எடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவை கோபத்தில் ஆழ்த்தினார். இந்த நிலையில் திடீரென புதிதாக ஒரு கோரிக்கையை அவர் தனி நீதிமன்றத்தில் வைத்தார்.
அதில் தனக்கு முறையாக பதிலளிக்க வசதியாக வழக்கின் ஆவணங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தரவேண்டும் என்று குண்டைப் போட்டார். ஆனால் இதை தனி நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் போனார். அங்கும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் சசிகலா.
தனது மனுவில், விசாரணை நீதிமன்றம் நான் கேட்ட ஆவணங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தர மறுக்கிறது. இதனால் என்னால் அரசுத் தரப்பு கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதை சந்தித்தாக வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி விட்டது.












Click it and Unblock the Notifications