இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூரில் நடைபெற்ற ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆ.ராசா பேசியது:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி கொடுத்த அறிக்கையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று தெரிவித்துள்ளனர். சிபிஐ குற்றப் பத்திரிகையில் ரூ. 33 ஆயிரம் கோடி நஷ்டம் என்று கூறியுள்ளனர். இவ்வழக்கில் நானே வாதாடி வருகிறேன். ஒரு ரூபாய்கூட நஷ்டம் இல்லை என்பதை நிரூபிப்பேன்.
ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாயாக இருந்த தொலைபேசிக் கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது, 30 கோடி பேர் மட்டுமே பயன்படுத்திய தொலைபேசி சேவையை 90 கோடி பேர் பயன்படுத்தும் வகையில் உயர்த்தியது, ரூ.310-ஆக இருந்த சராசரி தனிநபரின் மாத தொலைபேசிக் கட்டணத்தை ரூ.100 ஆகக் குறைக்க வைத்தது ஆகியவைதான் நான் செய்த தவறுகள்.
ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் செய்து ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை நான் எடுத்துக் கொண்டதுபோல என் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்காக 15 மாதம் சிறையில் இருந்து விட்டு வந்துள்ளேன். என்மீது குற்றமில்லை என்பதை நிரூபிப்பேன் என்றார் ராசா.
மேலும், அதிமுக அரசைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் ஜூலை 4-ம் தேதி நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்தும் ராசா விளக்கினார்.