கொலை வழக்கில் கைதான மாஜி எம்.பி. தன்ராஜை புழல் சிறையில் சந்தித்த அன்புமணி!
சென்னை: அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜை முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு தினத்தன்று திண்டிவனத்தில் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிற்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சண்முகம் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் அவரது உறவினரும், அதிமுக நிர்வாகியுமான முருகானந்தம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது. இதனையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சகோதரர் சீனுவாசன், சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்ட கருணாநிதி, சீனுவாசன் மகன் சுரேஷ் (36) உள்ளிட்ட 12 பேரை சிபிஐ கைது செய்தது.
மேலும் முன்னாள் பாமக எம்.பி. தன்ராஜையும் சிபிஐ கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இந்த நிலையில் சிறையில் உள்ள தன்ராஜை முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது சிறை சார்பில் தனி அறை ஒதுக்கவில்லையாம். வழக்கமாக கைதிகளை சந்திக்கும் அறைக்கு சென்று தான் தன்ராஜை பார்த்து அவர் ஆறுதல் கூறினாராம்.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு தான் ஜெயிலர் அறையில் சந்திக்க அனுமதி அளிக்கப்படுமாம்.