அபுஜிண்டால் நீதிமன்றத்தில் ஆஜர்: போலீஸ் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அபுஜிண்டால் சவூதி அரேபியாவில் பதுங்கி இருந்தான். அவன் கடந்த 22ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். அவனை நீதிமன்ற அனுமதியுடன் தங்களது கஸ்டடியில் வைத்து டெல்லி சிறப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது பாகிஸ்தானில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து மும்பை தாக்குதலை நடத்தியது, நாசிக் போலீஸ் அகாதெமியை தாக்க திட்டமிட்டது, லஸ்கர் இ தொய்பா அமைப்பினருக்கு சீனர்கள் வழங்கும் பாராகிளைடிங் பயிற்சிகள் என பல்வேறு உண்மைகளை புட்டுபுட்டு வைத்திருக்கிறான் அபுஜிண்டால்.
இருப்பினும் இவனிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் போலீஸ் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டிக்குமாறு டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மேலும் அபுஜிண்டாலின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவதால் அவனை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜிண்டாலின் போலீஸ் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படு்ததும் முன்பு ஜிண்டாலை டெல்லியில் உள்ள சப்தார்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.