லண்டனில் புர்கா அணிந்த கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு, தீவிரவாதி என்ற பிரபல பெண் போட்டோகிராபர்
லண்டன்: இங்கிலாந்தில் பிரபல புகைப்பட கலைஞர் சின்னமன் ஹீத்கோட் டிரரி புர்கா அணிந்த 6 மாத கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டதுடன், அவரை தீவிரவாதி என்று அழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் சின்னமன் ஹீத்கோட் டிரரி(41). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி அவர் மேற்கு லண்டன், கென்சிங்டன் பகுதியில் உள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு அவர் புர்கா அணிந்த மௌனியா ஹமௌமி என்ற 6 மாத கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டதாகவும், அவரை தீவிரவாதி என்றும், அவரது குடும்பத்தாரை தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் என்று கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணைக்காக ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான டிரரி கூறுகையில்,
டெஸ்கோ கடையில் மௌனியா ஹமௌமி மற்றும் அவரது கணவர் வாங்கிய பொருட்களை டிராலியில் இருந்து வாகனத்திற்கு எடுத்துச் செல்ல உதவ முன்வந்தேன். ஆனால் அவரது கணவர் எனது உதவியை ஏற்க மறுத்தார். மேலும் அந்த பெண் தான் என்னைத் திட்டி தாக்கினார். நான் அவர்களை எதுவும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை என்றார்.
அதற்கு நீதிமன்றம், நீங்கள் கணவன் மனைவி பேசியதை ஒட்டுக் கேட்டுள்ளீர்கள். உங்கள் உதவியை ஏற்க அவர்கள் மறுத்தவுடன் நீங்கள் அவர்களைத் திட்டியுள்ளீர்கள். மேலும் அந்த கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு அவரை தீவிரவாதி என்றும், அவரது குடும்பத்தாரை தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் என்றும் கூறியுள்ளீர்கள். இது தவிர நான் இங்கிலாந்து குடிமகள். நீங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டுள்ளீர்கள் என்று தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.