அப்பாடா, அனிதாவுக்கு வாழ்க்கை கிடைச்சிருச்சு...!
கன்னியாகுமரி: தன்னைக் கை கழுவிய காதலனை அடைய விடாமல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாக காதலன் வீடு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த அனிதாவுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. தனது காதலனையே அவர் கரம் பிடித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
திருவட்டார் அருகே மேல்புறம் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதான அனிதா. கல்லூரியில் படித்து வருகிறார். அருமனை அருகே உள்ளஊரைச் சேர்ந்தவர் சாஜன். 25 வயதான இவர் ராணுவ வீரர்.
நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலனை தனது கணவனாகவே வரித்துக் கொண்ட அனிதா, பல்வேறு ஊர்களுக்கும் காதலனுடன் போயுள்ளார், லாட்ஜ்களில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால் திடீரென அனிதாவைக் கை விட்டு விட்டார் சாஜன்.
இதையடுத்து தனது காதலன் வீடு முன்பு போராட்டத்தில் குதித்தார் அனிதா. இதையடுத்து சாஜன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இருந்தாலும் விடாப்பிடியாக போராடி வந்தார் அனிதா. அவருக்கு ஆதரவும் பெருகியது. அதைப் பார்த்து அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்தன. மக்களைத் திரட்டிப் போராடப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து பயந்து போன சாஜன் திரும்பி வந்தார். இதையடுத்து பஞ்சாயத்து பேசப்பட்டது. அதில் அனிதாவை தான் கல்யாணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார் சாஜன். இதையடுத்து ஊர் மக்கள் முன்னிலையிலேயே இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர் பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். அத்தோடு அனிதாவின் போராட்டம் இனிதே முடிந்தது.
தொய்ந்து போன முகத்துடன் போராடி வந்த அனிதா, காதலனைக் கரம் பிடித்த பின்னர் முகமெல்லாம் பூரிப்பாக காணப்பட்டார்.