18ல் கொடநாட்டில் இருநது சென்னை திரும்பும் ஜெயலலிதா
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகின்றார். இதேபோன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக மற்றும் சில கட்சிகள் ஆதரவுடன் முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள பி.ஏ. சங்மாவின் பெயரை முதலில் முன்மொழிந்தது அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தான். இதனால் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சங்மா ஆதரவு கேட்க இருந்தார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றதால் இதுவரை அவரை நேரில் சந்திக்க இயலவில்லை.
இந்நிலையில் சங்மாவை சந்திக்கவும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவும் வசதியாக வரும் 18ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சென்னைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சென்னையில் ஒரு சில தினங்கள் தங்கியிருப்பார் என்றும், பின்பு மீண்டும் கொடநாட்டுக்கு திரும்பி அங்கு 2 மாதங்கள் வரை இருப்பார் என்றும் கூறப்படுகின்றது. அங்கிருந்தே அரசுப் பணிகளை கவனிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே வேளையில் வரும் 15ம் தேதி சங்மா கொடநாட்டுக்கு சென்று முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.