கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: ரூ.18,700 கோடி கடன் வழங்கும் ரஷ்யா!
இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அணு உலைகள் உள்ளன. அதில் முதலாவது அணு உலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைக்க இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2 அணு உலைகள் அமைப்பதற்கான கடனுக்கான ஆவணங்கள்
நேற்று கையெழுத்தாகின. அதன்படி 3வது மற்றும் 4வது அணு உலைகளை அமைக்க மொத்தம் ரூ.32,000 கோடி செலவாகும். அதில் ரூ.18,700 கோடியை ரஷ்யா கடனாக அளிக்க முன்வந்துள்ளது.
அத்துடன் அணு உலை அமைப்பு பணிகளில் சப்ளை மற்றும் சேவைகளில் ரஷ்ய அணு சக்தி ஏஜென்சிகள் ஈடுபடும் என்று அது தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அணுசக்தி இயக்குரான சிறப்பு செயலாளர் ஜோஷி, ரஷ்ய கூட்டமைப்பின் நிதித்துறை துணை அமைச்சர் ஸ்டார்சக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே உள்ள 2 அணு உலைகளை எதிர்த்து கூடங்குளம் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மேலும் 2 அணு உலைகள் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.