கடும் எதி்ர்ப்பு: குன்னூரில் இருந்து வெளியேறிய இலங்கை ராணுவ அதிகாரிகள்
குன்னூர்: தமிழக அரசியல் தலைவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து இலங்கை ராணுவ அதிகாரிகள் குன்னூரில் இருந்து கிளம்பிச் சென்றனர்.
சீனா, ஆஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு வந்துள்ளனர். அவ்வாறு வந்துள்ளவர்களி்ல் இலஙக்கையைச் சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகளும் அடக்கம். இதற்கிடையே இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு முதல்வர் ஜெயலிலதாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவின் எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்காமல் அவர்களை உடனே நாட்டைவிட்டே வெளியேற்றக் கோரி அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
இந்த விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சி ஆகியவை இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க சம்மதித்த மத்திய அரசைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.
இதையடுத்து பயிற்சி பெற வந்திருந்த இலங்கை விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் ஜெகசுலரகா டயஸ், கடற்படை அதிகாரி எஸ்.ரணசிங்கே ஆகிய இருவரும் நேற்று காலை 6 மணிக்கு குன்னூரில் இருந்து வெளியேறினர்.
முன்னதாக சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இலங்கை விமானப்படையினர் தமிழகத்தில் இருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.