கர்நாடகத்தில் கோவில்களில் மழைக்காக பூஜை நடத்த மாநில அரசு ரூ.17 கோடி ஒதுக்கீடு!
கர்நாடகாவில் கடந்த 42 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் இந்த ஆண்டு மாநிலத்தின் உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது வறட்சியை சந்தித்து வரும் மாநிலங்களில், கர்நாடகா தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இந்த ஆண்டு 27 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
இந்த நிலையில் மாநிலத்தில் மழை பெய்ய வேண்டி பூஜை நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் 34 ஆயிரம் கோயில்களில் வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 7ம் தேதி வரை வர்ண பகவானுக்கு பூஜை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.17 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்து கோயில்களில் மட்டுமின்றி சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் குறிப்பிட தேதிகளில் சிறப்பு பிராத்தனை நடத்துமாறு, கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டி கேட்டு கொண்டுள்ளார்.