ஜெயலலிதா தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள்: ஜூனியர் விகடன் ஆசிரியருக்கு சம்மன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஜூனியர் விகடன் பத்திரிக்கைக்கு எதிராக தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில் அந்த பத்திரிக்கை ஆசிரியர், வெளியீட்டாளர், பதிப்பாளர் மற்றும் நிருபர்கள் ஆகியோர் வரும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
11.7.2012 அன்று 'துப்பட்டாவுக்குள் மறையும் ஜெயில் மகள்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலிலதாவின் மகள் என்று கூறும் பிரியா மகாலட்சுமி மோசடி வழக்கில் கைதான போதிலும் அவரை மீடியாவிடம் இருந்து போலீசார் பாதுகாப்பதேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக அதே பத்திரிக்கையில் 8.7.2012 அன்று வெளியான இதழில் 'என் கைதுக்கு காரணம் சசிகலா' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. மேலும் 15.7.2012 அன்று வெளியான இதழில் 'கோடநாடு வந்த குஷி ராவணன்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்ததிருந்தது. அதில் பல்வேறு வழக்குகளில் கைதான ராவணன் கோடநாடு சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ராவணன் கோடநாடு செல்லவும் இல்லை, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும் இல்லை. அப்படி இருக்கையில் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் வி்ளைவிப்பதற்காகவே அந்த பத்திரிக்கை இவ்வாறு அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜூனியர் விகடன் பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் ஏற்கனவே வெளியான 2 கட்டுரைகளுக்கும் கண்டனம் தெரிவித்து மொத்தம் 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதி பொன்.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த அவர் இந்த 3 அவதூறு வழக்குகளுக்கும் பதில் மனு தாக்கல் செய்ய ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் ஆசிரியர், வெளியீட்டாளர், பதிப்பாளர், நிருபர்கள் ஆகியோர் வரும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பிரியா மகாலட்சுமியும் அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.