டெல்லியில் ராம்தேவ் ஏற்படுத்திய பரபரப்பால் ஆடிப்போன அன்னா ஹசாரே குழு
டெல்லி: ஊழக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட யோகா குரு பாபா ராம்தேவ் அக்குழுவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரே குழுவினர் கடந்த 3 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கூட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று பாபா ராம்தேவ் கலந்து கொள்வார் என்றும் இதனால் கூட்டம் கணிசமாகக் கூடும் என்றும் அன்னா ஹசாரே குழு எதிர்பார்த்துக் காத்திருந்தது.
அப்போது தமது ஆதரவாளர்கள் புடைசூழ டெல்லியில் வலம் வந்த அவர் நேராக ராம்லீலா மைதானத்துக்குப் போய்விட்டார். அங்கு போய் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அன்னா ஹசாரே குழுவினரை புறக்கணித்து ராம்லீலா மைதானத்தில் தனியாகப் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டதாக செய்திகள் பரவிவிட்டன. மேலும் அன்னா ஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இருந்த ராம்தேவ் ஆதரவாளர்களும் ராம்லீலா மைதானத்துக்குப் போய்விட்டனர். இதனால் பெரும் குழப்பத்தில் அன்னா ஹசாரே குழு சிக்கிக் கொண்டது.
பின்னர்தான் ராம்தேவ், ராம்லீலா மைதான நிகழ்ச்சியை முடித்துவிட்டு அன்னா ஹசாரேயை சந்திக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. அப்பாடா என பெருமூச்சு விட்டது அன்னா ஹசாரே குழு.
அன்னாவை கிண்டலடித்த ராம்தேவ்
ராம்லீலா மைதானத்தில் ராம்தேவிடம் அன்னா ஹசாரே கூட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லையே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
எந்த ஒரு மக்கள் இயக்கமும் வெற்றி பெற வேண்டும் எனில் நாட்டின் மக்கள் தொகையில் ஒருவிழுக்காடு அளவினர் அதாவது 1 கோடிப் பேர் பங்கேற்க வேண்டும். நான் இதுவரை 11 ஆயிரம் மக்கள் பேரணியை நடத்தியிருக்கிறேன். ஒன்று கூட தோல்வியில் முடிந்தது கிடையாது. இந்த மக்களுக்காக கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். எப்போதும் மக்களின் ஆதரவு எனக்கு இல்லாமல் இருந்ததே கிடையாது என்று மறைமுகமாக அன்னா ஹசாரே குழுவுக்கு ஆதரவு இல்லாததைப் பற்றிக் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications