"பெஸ்ட்'" ராமசாமி கூட்டிய பொதுக்குழு வேஸ்ட்- நாங்கள்தான் உண்மையா கொ.மு.க: ஈஸ்வரன்
கோயம்புத்தூர்: கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பிளவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கொமுக தலைவரான பெஸ்ட் ராமசாமி தலைமையில் அண்மையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக இருக்கும் ஈஸ்வரனை நீக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதை ஈஸ்வரன் நிராகரித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 12-ந் தேதி தாம் கூட்டியிருக்கும் பொதுக்குழுவே உண்மையானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈஸ்வரன் கூறியுள்ளதாவது:
கட்சியின் சட்டவிதிகளின் படி பொதுக்குழுவை கூட்ட தலைவருக்கு அதிகாரம் கிடையாது. பொதுச்செயலாளர்தான் கூட்ட முடியும். நாங்கள் 12-ந்தேதி கூட்ட இருக்கும் பொதுக்குழுவிற்கு 21 நாட்கள் கால அவகாசம் கொடுத்து இருக்கிறோம். அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு பதிவு தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. அதை அவர் கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். இந்த நிலையில் முன்தேதியிட்டு போட்டி பொதுக்குழுவை கூட்ட அவருக்கு அதிகாரம் இல்லை. ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களில் 10 பேர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். 28 மாவட்ட செயலர்களில் ஒருவர்தான் கலந்து கொண்டிருக்கிறார்.
எங்களை நீக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. தியாகி தீரன் சின்னமலை வழிவந்த நாங்கள் அவர் கொள்கையில் தொடர்ந்து நடப்போம். நீதி, உண்மை என்றும் தோற்றது இல்லை. அவர் பொதுக்குழுவை கூட்டியது செல்லாது, அதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றார் ஈஸ்வரன்.
சூதாட்டப் புகாரில் பெஸ்ட் ராமசாமி
இதனிடையே திருப்பூரில் கிளப்கள் மற்றும் ஹோட்டல்களில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூர் கிளப்பில் சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெஸ்ட் ராமசாமியின் பெயரும் சேர்க்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் போலீசார் சோதனையின் போது தாம் உடனிருந்ததாகவும் தாம் சூதாடவில்லை என்பது போலீசாருக்குத் தெரியும் என்றும் தாம் தலைமறைவாக இருப்பதாக பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது என்றும் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.