சோனியா காந்தி விருந்து: முலாயம் பிரசென்ட், பவார், பிரபுல் பட்டேல் ஆப்சென்ட்
துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நேற்று தனது இல்லத்தில் மதிய விருந்து அளித்தார். விருந்து நடந்த ஜோரைப் பார்த்தாலே துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீது அன்சாரி வெற்றி பெற்றுவிடுவார் என்பது போன்று இருந்தது.
இந்த விருந்தில் பரம எதிரிகளான சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கலந்து கொண்டனர். சோனியா காந்தி இருந்த டேபிளில் மாயாவதி உணவருந்தினார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அருகில் முலாயம் அமர்ந்திருந்தார். முலாயமின் மகனும் உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவும் விருந்திற்கு வந்திருந்தார்.
கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி வராவிட்டாலும் தனது கட்சி எம்.பி.க்களை அனுப்பி வைத்தார். அவர்களுக்காக ஸ்பெஷலாக மீன் வகைகள் பரிமாறப்பட்டன. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம் பவாரின் மகள் சுப்ரியா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தாரிக் அன்வர், டிபி திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங், மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே, ஏ.கே. அந்தோணி, வீரப்ப மொய்லி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங் ஆகியோருடன் விருந்து உண்டார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 790 எம்.பி.க்களில் 500 பேருக்கு மேல் அன்சாரிக்கு ஆதரவாக உள்ளனர் என்று மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவி்ததார்.