பாதி பஸ்களை மட்டும் இயக்கும் ஜியோன் பள்ளி - பொதுமக்கள் கோபம்
சென்னை: சென்னையில் 7 வயது சிறுமி ஸ்ருதியின் உயிரைப் பறித்த சம்பவத்திற்குப் பின்னர் இயக்கப்படாமல் இருந்து வரும் ஜியோன் பள்ளியின் பேருந்துகள் இன்று பாதி அளவுக்கு இயக்கப்பட்டன. அதாவது மெயின் பள்ளியில் உள்ள பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. மாறாக, கிளைப் பள்ளிகளில் உள்ள பேருந்துகளை மட்டும் இயக்குகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் கோபமடைந்துள்ளனர்.
சென்னை கிழக்குத் தாம்பரம், சேலையூரில், ஜியோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 2வது வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி, சமீபத்தில் தனது பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது அதில் இருந்த ஓட்டையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பேருந்தை தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜியோன் பள்ளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டது. மேலும் அதன் பேருந்துகள், வேன்கள் எதுவும் இயக்கப்படவில்லை. மேலும் பள்ளியின் தாளாளர் விஜயன், அவரது இரு தம்பிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஜியோன் பள்ளியின் சேலையூர் மெயின் பள்ளி, செம்பாக்கம், மாடம்பாக்கம் கிளைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பேருந்துகள், வேன்களில் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆனால் இந்த ஆய்வுக்குப் பின்னரும் கூட பள்ளிப் பேருந்துகளை நிர்வாகம் இயக்காமல் பெற்றோர்களை வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறது. ஏன் பள்ளிப் பேருந்துகளை இயக்கவில்லை என்று கேட்டால், எங்கள் தாளாளரையே பிடித்து உள்ளே போட்டு விட்டார்கள். அவர்கள் வெளியே வரும் வரை பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று அலட்சியமாக கூறுகிறார்களாம். இதனால் பெற்றோர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். நீண்ட தொலைவிலிருந்து பிள்ளைகளை அழைத்து வர வேண்டியுள்ளதே என்று அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
இருப்பினும் செம்பாக்கம் பள்ளியின் பேருந்துகள், வேன்கள் இன்று இயக்கப்பட்டன.
தாளாளருக்கு ஜாமீன் கிடையாது
இந்த நிலையில் ஜியோன் பள்ளி தாளாளர் விஜயன், தாம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோருக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது. இதனால் தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ராஜசேகர்தான் ஓட்டைப் பேருந்துக்கு எப்சி போட்டுக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.