சாப்ட்வேர் நிறுவனங்களில் 5ல் ஒரு பயோ-டேட்டா போலியானது!
சமீபத்தில் ஐபிஎம் நிறுவனத்தில் மாதம் ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பணியாற்றிய 33 வயதான நந்தன் என்பவர் சிக்கினார். அவர் தனது மனைவியின் பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றிதழ்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதில் தனது பெயரைச் சேர்த்திருந்தது தெரியவந்தது.
கிட்டத்தட்ட 3 வருடம் பணியில் இருந்துவிட்ட அவரை மாட்டிவிட்டது அவரது மனைவியே தான் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு பெண்ணுடன் அவருக்குக் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதையடுத்து தனது கணவரின் பயோடேட்டா பிராடை அலுவலகத்துக்குத் தெரிவித்து அவரை மாட்டி விட்டார் மனைவி.
போலி சான்றிதழ்களையும், போலியான எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட்களையும், பயோடேட்டாக்களில் போலி தகவல்கள் இடம் பெறுவதைத் தடுக்கவும் பெரும்பாலான நிறுவனங்களின் எச்.ஆர். பிரிவுகள் கிராஸ் செக்கிங் சிஸ்டத்தையும், வெரிபிகேசன் சிஸ்டத்தையும் வைத்திருந்தாலும் அதையும் மீறி போலிகளைத் தடுக்க முடியாத நிலையே நிலவுகிறது.
சில நிறுவனங்கள் தனது ஊழியர் போலி சான்றிதழைத் தந்துள்ளதை அறிந்தாலும், அவர் சரியான பணியாற்றினால் அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் நிலையும் உள்ளது. சில நிறுவனங்கள் அந்த ஊழியரை பணி நீக்கம் செய்வதோடு விட்டுவிடுகின்றன. போலீசில் புகார் தருவது எல்லாம் இல்லை.
சமீபத்திய ஆய்வுகளில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியில் உள்ளவர்களில் 5ல் ஒருவரது பயோடேட்டாவில் போலியான தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
விப்ரோ போன்ற நிறுவனங்கள் இந்த போலி பயோடேட்டாக்களைத் தடுக்க e-Recruitment systemத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் போலிகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளனர் என்கிறது விப்ரோ.
இந்த விவகாரத்தைத் தடுக்க ஒரே வழி அனைத்து பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களும் ஆன்-லைன் டேட்டாபேசில் கொண்டு வரப்பட வேண்டும் என்கிறது நாஸ்காம்.