நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனைக்கு தடை நீட்டிப்பு
நடிகை ரஞ்சிதாவுடன் தகாத உறவு வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என, இந்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக போலீசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தாவிடம் ஜூலை 30ம் தேதி ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகா போலீசார் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நோட்டீஸ் அனுப்பியும், அவர் நேரில் ஆஜராகவில்லை.
இந் நிலையில் நித்யானந்தா தனது சீடர்களுடன் புனித யாத்திரையாக மானசரோவர் சென்றுவிட்டார். கூடவே நடிகை ரஞ்சிதாவும் சென்றுள்ளார்.
இந் நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் தாக்கலான மனுவில் 6 மாதங்களுக்கு முன்னரே மானசரோவர் புனித யாத்திரை செல்ல திட்டமிட்டதால் மருத்துவப் பரிசோதனைக்கு வர இயலவில்லை. எனவே, ஆகஸ்ட் 25க்கு பின்னர் மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடக போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்றத்தை நித்யானந்தா அவமதித்துள்ளதால், அவரை கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 9ம் தேதி வரவுள்ளது.
இதற்கிடையே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த மனுவில், மானசரோவர் புனித யாத்திரை சென்றுள்ளதால், ராம்நகர் நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக முடியவில்லை. எனவே, மருத்துவ பரிசோதனையிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நேற்று ஒரு நாள் மட்டும் நித்யானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதில் இருந்து விலக்களித்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய விதித்திருந்த தடையை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி வி.ஜெகநாதன் உத்தரவிட்டார்.
முன்னதாக, நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், சட்டத்தின் பார்வையில் ஆண்மை பரிசோதனை செல்லுபடியாகாது. மேலும், பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை, ஆண்மை பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியாது என்று வாதம் செய்தார்.