கலாஷேத்ரா இயக்குனராக லீலா சாம்சனை நியமித்தது செல்லாது-ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை: கலாஷேத்ரா நிறுவனத்தின் இயக்குனராக இருந்து ராஜினாமா செய்த லீலா சாம்சனை மீண்டும் அதே பதவியில் மத்திய கலாச்சார துறை நியமித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா நிறுவனத்தில் இயக்குனராக லீலா சாம்சன் கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு(2011) மே மாதம் அவர் 60வது வயதில் ஓய்வு பெற்றார். ஆனால் அவரே தொடர்ந்து இயக்குனராக பதவி வகித்து வந்தார்.
இதை எதிர்த்து கலாஷேத்ரா ஊழியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து லீலா சாம்சன் மத்திய கலாச்சார துறைக்கு கடந்த 30.4.2012 அன்று தனது பதவியை ராஜினமா கடிதத்தை அனுப்பினார். அவரது ராஜினாமா கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் கடந்த ஜூன் 29ம் தேதி மத்திய கலாசார துறையிடம் இருந்து வந்த கடிதத்தில், லீலா சாம்சனின் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற அனுமதி அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவரை மீண்டும் இயக்குனராக நியமித்து மத்திய கலாச்சாரத் துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கலாஷேத்ராவை சேர்ந்த உதவி இசை போராசிரியர் சாய் சங்கர், வயலின் குரு ராமதாஸ் உட்பட 16 கலாஷேத்ரா குருக்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார், இயக்குனராக பணியாற்ற லீலா சாம்சனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், மத்திய கலாச்சார துறையின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இது குறித்து நீதிமன்ற தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
கலாஷேத்ரா என்ற நிறுவனம், கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் விதிமுறைகளின் கீழ், ஒருவர் ராஜினாமா செய்த பிறகு, தனது ராஜினாமாவை வாபஸ் பெற அனுமதிக்கவும், அதே நபரை மீண்டும் இயக்குனராக நியமிக்கவும் முடியாது. லீலா சாம்சனை இயக்குனராக நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து வழக்கு தொடர்ந்த கலாஷேத்ரா ஊழியர்கள் கூறியதாவது,
மத்திய கலாச்சார துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. லீலா சாம்சன் பணியில் இருந்த போது, அவர் மீது பல புகார்கள் எழுந்தது என்றனர்.