ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடுத்த ரூ.500க்காக சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசிய 2 சிறுவர்கள்
ஸ்ரீநகர்: தீவிரவாத தாக்குதல்கள் நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சிறார்களை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சொபோர் நகரத்தில் உள்ள சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2ம் தேதி நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்பவர்களின் பிள்ளைகள். லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவன் தள்ளு வண்டியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்த 12 மற்றும் 13 வயது சிறுவர்களை அணுகி போலீஸ் சோதனைச் சாவடியின் மீது வெடிகுண்டை வீசினால் ரூ.500 தருவேன் என்று ஆசை காட்டியுள்ளான்.
வறுமையில் வாடும் அவர்களுக்கு ரூ.500ஐ கண்டதும் அதை வேண்டாம் என்று சொல்ல மனமில்லை. அதனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலையை கச்சிதமாக முடித்தனர். ஆனால் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அந்த 2 சிறுவர்களும் சிக்கினர். கைது செய்யப்பட்ட அந்த இருவரும் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாதவர்கள். லஷ்கர் இ தொய்பா சிறுவர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து சொபோர் எஸ்.பி. இம்தியாஸ் அகமது கூறுகையில்,
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களை பணத்தைக் காட்டி தங்கள் பக்கம் இழுப்பது சுலபம். தற்போது வெடிகுண்டு வீசியவர்கள் தவிர கல்வீச்சு நடத்தவும் தீவிரவாதிகள் சில சிறுவர்களை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. அவர்கள் பணத்திற்காக தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளும்படி நேரலாம் என்றார்.
குண்டு வீச்சு வழக்கில் கைதான சிறுவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சொபோர் பகுதியில் மட்டும் சுமார் 2,000 சிறுவர்களை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த பயன்படுத்தி வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவி்த்தார்.












Click it and Unblock the Notifications