பயன்படுத்தப்படாமல் வெயில், மழையில் அடிபடும் 40 புதிய பேருந்துகள்
நெல்லை: வழித்தடங்களில் போதிய பேருந்துகள் இல்லாத நிலையில் கேடிசி நகர் பனிமனையில் 40 புதிய அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டுள்ள இவை வெயிலில் காய்ந்து மழையில் நனைவதால் உதிரிபாகங்கள் பாழாகும் நிலை உள்ளது.
நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் நெல்லை, நாகர்கோவில் மண்டலம் மூலம் நகரம் மற்றும் நெடுந்தூரங்களுக்கு சுமார் 1,953 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல ஆண்டுகள் ஓடிய பழைய பேருந்துகளுக்கு பதிலாக 266 புதிய பேருந்துகள் நெல்லை கோட்டத்திற்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நெல்லை மண்டலத்திற்கு 150 பேருந்துகள், நாகர்கோவில் மண்டலதுக்கு 116 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டன.
நெல்லை மண்டலத்துக்காக வழங்கப்பட்ட 150 பேருந்துகளில் பாளை மார்க்கெட் பகுதியில் உள்ள கூ்ண்டு கட்டும் பிரிவில் 40 பேருந்துகளுக்கு கூண்டு கட்டப்பட்டு இயக்க தயாராக கேடிசி நகர் பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தென்காசி-நாகர்கோவில், செங்கோட்டை-இராமநாதபுரம், தென்காசி-உடன்குடி, தூத்துக்குடி-திண்டுக்கல், பாபநாசம்-நெல்லை, நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்க வழித்தடங்களும் குறிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை இயக்கப்படாமல் கடந்த ஒன்றரை மாதமாக வெட்ட வெளியில் நிற்பதால் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து உதிரி பாகங்கள் வீணாகி வருகின்றன. எனவே, அரசு இவற்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications