லாட்டரியில் ரூ.1.10 கோடி பரிசு: நாகை வாலிபர் மலேசியாவில் மர்ம மரணம்- கலெக்டரிடம் புகார்
நாகை: மலேசியாவில் வேலை பார்த்த தனது மகன் விஜயராகவன் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும், அவரது உடலை மீ்ட்டுத்தர வேண்டும் என்றும் சரோஜா என்பவர் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமியிடம் மனு அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் விஜயராகவன் (28). ஏ.சி. மெக்கானிக்கான அவர் கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியா சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 5ம் தேதி மதியம் தனது தாய் சரோஜாவை போனில் தொடர்பு கொண்ட அவர் தனக்கு மலேசிய லாட்டரி சீட்டில் ரூ1.10 கோடி பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், பரிசுத் தொகையுடன் ஆகஸ்ட் 9ம் தேதி திருப்பூண்டிக்கு வந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் தனது மகன் வருகையை எதிர்பார்த்தும், மறுபக்கம் மகனுக்குப் கோடி ரூபாய் பரிசு விழுந்ததும் சரோஜாவுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது. இந்நிலையில் சரோஜாவுக்கு மலேசியாவில் இருந்து விஜயராகவனின் நண்பர் தேவகோட்டையைச் சேர்ந்த பிரபாகரனிடம் இருந்து ஒரு போன் வந்துள்ளது.
போனில் பேசிய பிரபாகரன் விஜயராகவன் எனது வீட்டுக்கு வந்த போது அவருக்கு எனது மனைவி ஜூஸ் கொடுத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்பு திடீரென்று அவர் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவி்ட்டார்.
அரை மணி நேரம் கழித்து மீண்டும் சரோஜாவை தொடர்பு கொண்ட பிரபாகரன், விஜயராகவன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரோஜா கதறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அவரது உறவினர்களும் பிரபாகரனை தொடர்பு கொண்டு விவரம் கேட்டபோது, விஜயராகவன் கார் விபத்தில் இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இதனால் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது மரணத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மகன் உடலை மீட்டுத் தர வேண்டும் என்றும் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமியிடம் சரோஜா மனு கொடுத்துள்ளார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்திற்குக் கடிதத்தை அனுப்பி வைத்தார். விஜயராகவனுக்கு லாட்டரியில் ரூ1.1 கோடி பரிசுத் தொகை விழுந்ததால் அதை அபகரிக்க அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று அவரது பெற்றோர்களும், உறவினர்களும் சந்தேகப்படுகின்றனர்.