ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தா வருமானம் எப்படி வரும்?: பள்ளி வேன் ஓட்டுநர்கள் கேள்வி
சென்னை: பள்ளி கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை கடுமையாக கடைபிடிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டால் தங்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக பள்ளி வேன் ஓட்டுநர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை சிறுமி ஸ்ருதியின் மரணத்தில் தொடங்கியது பாதுகாப்பற்ற வாகனங்களை வேட்டையாடும் அரசின் நடவடிக்கை! கடந்த சில வாரங்களில் தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்து 500 பள்ளி வாகனங்கள் சோதனையிடப்பட்டிருக்கின்றன. முறையான பாதுகாப்பு வசதியில்லாத 450 பள்ளி வாகனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்துசெய்யபப்ட்டிருக்கின்றன.
இது தொடர்பாக பள்ளி வேன் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் வீரசேகர் கூறுகையில், ஒரு ஆண்டுக்கு ஒரு பேருந்தை இயக்குவதற்கு ரூ3.20 லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் ஓட்டுநர், உதவியாளர்களின் ஊதியம் எரிபொருள் செலவு போன்றவையும் அடங்கும். ஒரு வேனில் குறைந்தபட்சம் 20 குழந்தைகளாயவது ஏற்றிச் சென்றால்தான் எங்களுக்கு வருவாய் லாபமுள்ளதாக இருக்கும். கூடுதலாக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இதேபோல் குழந்தைகளுக்கு சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் செய்து தரவேண்டுமெனில் கூடுதலாக பல ஆயிரம் செலவாவதுடன் வேறு எந்த பணிக்குமே வாகனங்களை பயன்படுத்த முடியாத ஒருநிலையும் ஏற்படும் என்கின்றனர் பள்ளி வாகன ஓட்டுநர்கள்.