கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலூர் கிரானைட் குவாரி முறைகேட்டில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது,
கிரானைட் ஊழல் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றது வருகின்றது. இந்த ஊழல் காரணமாக 14 கண்மாய், 13 கால்வாய், வண்டிப்பாதை, பஞ்சமி நிலங்கள் போன்றவற்றைக் காணவில்லை.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது, மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, நான் ஆட்சிக்கு வந்தால் கிரானைட் குவாரி கொள்ளையைத் தடுப்பேன் என்றார். ஆனால் கடந்த ஓராண்டாக அவர் கிரானைட் குவாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக 19-5-2012 அன்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தான் அதிரடி நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் பிறகும் அந்த அறிக்கை மீது 2 மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஊழலில் ரூ. 35,000 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தாகும்.
இதில் தொடர்புடைய நிறுவனங்களின் உரிமத்தை ரத்துச் செய்து, அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், இந்த மெகா ஊழல் பல ஆண்டுகளாக நடைபெற்றும் அரசு தடுத்து நிறுத்தவில்லை. இதற்கு பல முக்கிய அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதால் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.