ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தனித் தமிழீழமே
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழ நாடு அமைவதுதான் தீர்வு என்று லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் ராம்விலாஸ் பஸ்வான் பேசியதாவது:
இலங்கையில் தமிழீழம் என்ற தனிநாடு கோரி நடைபெறும் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா? என்று என்னிடக் பலரும் கேட்டிருக்கின்றனர். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான். அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால் அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.
இலங்கையில் எந்த ஒரு தமிழரும் பிரதமராக, அதிபராக வர முடியாது. இலங்கை இறுதிப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
ஈழத் தமிழர் பிரச்சனையானது தமிழ்நாட்டுக்குள்தான் தெரிகிறது. தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்கள் என்றால் விடுதலைப் புலிகள். அவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் கருதுகின்றனர். அமைதியான வழியில் போராடிப் பார்த்துப் பயன்கிடைக்காததால் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடினர். இந்த உண்மை தமிழ்நாட்டுக்குத் தான் தெரியும். பிறமாநிலங்களுக்குத் தெரியவில்லையே.
டெசோ மாநாடுகளை வடமாநிலங்களில் நடத்த வேண்டும். அவர்களுக்கும் அப்போதுதான் ஈழப் பிரச்சனை பற்றி தெரியவரும். ஈழத் தமிழர் உரிமை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஈழத் தமிழர் பிரச்சனை தீர தனித் தமிழீழமே தீர்வு என்றார் அவர்.