மும்பை தாக்குதலுக்கு முன்பாக தாவூத் வைத்த விருந்தில் கலந்து கொண்டேன்- சஞ்சய் தத்
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அதில் 277 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவர் மீது துப்பாக்கி வைத்திருந்தது, தாவூத்துடன் தொடர்பு கொண்டிருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் தத்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முன்பாக தாவூத் இப்ராகிம் சார்பில் சஞ்சய் தத்திடம் ஏகே 56 ரக துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல், கிரனேடுகள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளனர். அதை சில நாட்களில் சஞ்சய் தத் திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் ஒரே ஒரு ஏகே 56 ரக துப்பாக்கியை மட்டும் தன்னிடமே வைத்துக் கொண்டார்.
சஞ்சய் தத்திடம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைத்தான் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தாவூத் கும்பலைச் சேர்ந்த தீவிரவாதிகள் பயன்படுத்தினர் என்று சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. மேலும் தாவூத்துடன் சஞ்சய் தத்துக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறியிருந்தது.
இந்த வழக்கில் 2007ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்ததற்காக சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துகோர்ட் தீர்ப்பளித்தது. பின்னர் அவர் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். ஜாமீனும் கோரினார். இதையடுத்து உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு ஜாமீன் அளித்தது.
தற்போது அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாவூத் இப்ராகிமுக்கும், சஞ்சய் தத்துக்கும் இடையிலான நட்பு குறித்து நீதிபதிகள் கேட்டனர். நேற்றைய விசாரணையின்போது சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
அவர் சார்பில் அவரது வக்கீல் ஹரீஷ் சால்வே கூறுகையில், மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பு துபாயில் தாவூத் இப்ராகிம் தனது வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.
இந்த விருந்தில் பாலிவுட் தயாரிப்பாளர்கள் இருவரும் கூட கலந்து கொண்டனர். இதைத் தவிர சஞ்சய் தத்துக்கும், தாவூத் இப்ராகிமுக்கும் வேறு எந்த உறவும், தொடர்பும் இல்லை என்றார் சால்வே.
சால்வே மேலும் கூறுகையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் மும்பையில் அப்போது பிரபலமான காங்கிரஸ் எம்.பியாக இருந்த சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத்துக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனால்தான் பாதுகாப்புக்காக இந்த துப்பாக்கிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை தத் குடும்பத்தினர் திருப்பி அனுப்பி விட்டனர் என்றார்.