அசாம் இனமோதல் குற்றவாளிகள் யார்? துப்பு கொடுத்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்க சிபிஐ அறிவிப்பு
டெல்லி: அசாம் இன மோதல் வன்முறையில் குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிபிஐ அறிவித்துள்ளது.
அசாமில் இன மோதல் வெடித்த 3 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 7 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. அசாமின் கோக்ராஜர், சிராங் மற்றும் துப்ரி ஆகிய 3 மாவட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக இரண்டு டிஐஜிக்கள் தலைமையில் சிபிஐ விசாரணை நடத்துகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ செய்தித் தொடர்பாளர் தரினி மிஷ்ரா, இன மோதல்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோ கிளிப்பிங்குகள் இருந்தால் அவற்றை சிபிஐயிடம் ஒப்படைக்கலாம் என்றும் அப்படி தகவல் தருவோருக்கு ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக 08811099997, 08811099996 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உரிய தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
அசாமில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக போடோ இனப் பழங்குடியினருக்கும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய சிறுபான்மையினருக்கும் இடையேயான வன்முறையினால் 75க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த மோதலானது கடந்த சில நாட்களாக பெரும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கர்நாடகம், ஆந்திரம் ,தமிழகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர் பல்லாயிரக்கணக்கானோர் அடித்துப் பிடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.