ஈழத் தமிழருக்கு இந்தியா கொடுத்த நிதி என்ன?: எஸ்.எம். கிருஷ்ணா விளக்கம்
மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக எஸ்.எம். கிருஷ்ணா அளித்த பதில்:
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றத்துக்காகக் அந்நாட்டுக்கு 2009-10-ம் நிதியாண்டில் ரூ. 68.96 கோடி, 2010-11-ம் நிதியாண்டில் ரூ. 93.86 கோடி, 2011-12-ம் நிதியாண்டில் ரூ. 181.94 கோடி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியில் ரேஷன் பொருள்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் தாற்காலிக மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. மருந்துகள் வழங்கப்பட்டன.
நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய இந்தியாவிலிருந்து 7 குழுக்கள் அனுப்பப்பட்டன. உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தோருக்காக 10,400 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட தங்குமிடப் பொருள்கள், வேளாண் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் 95 ஆயிரம் பொருள்கள், 500 டிராக்டர்களும் வழங்கப்பட்டன.
இவை தவிர வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் பயணிகள் பேருந்து சேவைக்காக 55 பேருந்துகளை இந்தியா இலவசமாக வழங்கியது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம், வவுனியாவில் செயற்கைக் கை, கால் உறுப்புகளை பொருத்துவதற்காக இந்திய நிபுணர்கள் ஒரு மாத முகாம் நடத்தினர். போரின்போது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சரி செய்ய 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மறுவாழ்வு, மீள்குடியேற்றப் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக நடப்பாண்டில் ரூ. 290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணிகளுக்காக 80 கோடி அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு இந்தியா கடனாக வழங்கியுள்ளது. இந்த நிதி அனைத்தும் சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க இரு நாட்டு அரசுகளின் சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.