தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பட்டாசுகள் இருந்ததாலேயே தீ வேகமாகப் பரவியது: தடயவியல் அறிக்கை
ஹைதராபாத்: நெல்லூர் அருகே தீப்பிடித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 11 பெட்டியில் பட்டாசுகள் இருந்ததாலேயே தீ வேகமாகப் பரவியதாக தடயவியல் நிபுணர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை நெல்லூர் அருகே தீப்பிடித்தது. இந்த விபத்தில் தீப்பிடித்த எஸ் 11 பெட்டியில் இருந்த 32 பயணிகள் உடல் கருகி இறந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். தீப்பிடித்த பெட்டியில் கிடந்த பொருட்களை சேகரித்து தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையை முடித்த அவர்கள் தங்கள் அறிக்கையை ரயில்வே துறையிடம் சமர்பித்துள்ளனர்.
இந்நிலையில் தீபிடித்த பெட்டியில் இருந்த பொருட்களை பரிசோதித்த குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தீப்பிடித்த பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் இருந்தது. அந்த பெட்டியில் பட்டாசுகள் இருந்ததாலேயே தீ வேகமாகப் பரவியுள்ளது. ஆனால் பெட்டியில் தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை என்றார்.