அழகுக்காக சாப்பிடாததால்தான் ஊட்டச்சத்துக்குறைபாடு வருகிறது.. குஜராத் பெண்களுக்கு மோடி கண்டனம்!
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது..
குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் சைவ உணவு சாப்பிடுவோர் இருக்கிறார்கள். மேலும், இங்கு நடுத்தர வகுப்பு மக்களும் அதிகம் உள்ளனர். நடுத்தர வகுப்பு மக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை விட அழகுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இது சவாலானது.
ஒரு தாய், தனது மகளிடம் பால் சாப்பிடு என்றால் அங்கே பெரிய சண்டையே வெடிக்கிறது. பால் சாப்பிட்டால் எனது உடல் பெருத்து விடும், கொழுப்பு கூடி விடும், குண்டாகி விடுவேன் என்று பெரும்பாலான டீன் ஏஜ், இளம் பெண்கள் கூறுகிறார்கள். இப்படி இருப்பதால்தான் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது என்றார் மோடி.
இதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன. அது மோடிக்கு் தெரியாமல் போனது வருத்தமானது என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறுகையில், ஜிடிபி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார் மோடி. கல்வி, சுகாதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை என்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ் கூறுகையில், மோடி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும். பெண்களை மிகவும் ஏழ்மையானவர்கள், வறுமையானவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போல இது காட்டுகிறது என்றார்.