நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவை ஆதரித்தால் தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன்: விஜயகாந்த்
திருவள்ளூர் மாவட்ட தேமுதிக சார்பில் சிறைவாசி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசியதாவது,
பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் வரும் வழி மிகவும் மோசமாக உள்ளது. திருவள்ளூரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. திருவள்ளூர் அரசு மருத்துவமனையோ குப்பைக் கூளமாக உள்ளது. சிறை கைதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காவல்துறையினரை அணுகினோம். அவர்கள் என்னவென்றால் தவறான முகவரியைக் கொடுத்து ஏமாற்றினர்.
சிறை கைதிகளின் குடும்பத்திற்கு இதுவரை யாரும் உதவவில்லை. தேமுதிக தான் முதல் முறையாக நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது. இலவசமே வேண்டாம் என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த இலவசங்கள் வேலைவாய்ப்பை அளிப்பதாக அமைய வேண்டும். ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி கொடு்க்கின்றனர். ஆனால் அந்த அரசி தரமற்றது.
மின்சாரம் இல்லாததால் விவசாயம் மற்றும் நெசவுத் தொழிலை நம்பி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போதைய அரசு மக்களுக்கு ஆடு, மாடுகளை இலவசமாக வழங்குகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பை அளிக்குமாறு நான் கூறி வருகிறேன்.
இரண்டு கட்சிகளும் மக்களுக்கு என்ன நன்மை செய்தன. அரசு மருத்துவமனைகளுக்குள் பெருச்சாளி புகுந்து பச்சிளம் குழந்தையை கடிக்கும் நிலை தான் உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தேமுதிகவை ஆதரித்தால் நான் மக்களை தங்கத் தட்டில் வைத்து தாங்குவேன் என்றார்.