மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.754.50: கவலையில் மக்கள்
கடந்த 13ம் தேதி மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் செய்கிறேன் என்ற பெயரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது இனிமேல் ஆண்டுக்கு ஒரு வீட்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும், கூடுதல் சிலிண்டர் தேவைப்பட்டால் மானியமில்லாமல் தான் வாங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்த புதிய கட்டுப்பாடு வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மானியம் இல்லாமல் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன. அதன்படி 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இனி ரூ.754.50க்கு விற்கப்படும்.
மானிய விலையில் பெறும் சிலிண்டர்களுக்கு ரூ.386 கொடுத்தால் போதும். ஆனால் மானியமில்லா சிலிண்டருக்கு இனி ரூ.368 கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று சிலிண்டர் கட்டுப்பாடு குறித்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், லக்னோ ஆகிய 6 நகரங்களில் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 93 சதவீதம் பேர் சிலிண்டர் கட்டுப்பாட்டுக்கு எதிரிப்பு தெரிவித்துள்ளனர். இது தவிர 87 சதவீதம் பேர் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.