வடபழனி முருகன் கோவிலில் 3 வெள்ளி கட்டிகள் மாயம்: திருடியது யார் என்பதில் மர்மம்
சென்னை: சென்னை வடபழனி முருகன் கோவிலிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட 3 வெள்ளி கட்டிகள் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை, வடபழனி முருகனுக்கு கோவிலில் பக்தர்கள் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக அளிக்கப்படும் நகைகளில் விலை உயர்ந்தவற்றை கோவில் துணை கமிஷனரும், மற்றவை அர்ச்சகர்களும் பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த ஜனவரி மாதம் வடபழனி முருகன் கோவிலுக்கு 7 வெள்ளி கட்டிகளும், 100 கிலோ வெள்ளி துகள்களும், கொலுசுகளும் காணிக்கையாக வழங்கினார். இதை அப்போதைய கோவில் துணை ஆணையராக இருந்த காவேரி என்பவர் கோவில் பெட்டகத்தில் வைத்திருந்தார்.
காவேரி இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய துணை ஆணையர் பதவி ஏற்றார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக வடபழனி கோவில் நகைகளை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது கோவில் பெட்டகத்தில் உள்ள நகைகளை பரிசோதித்த போது, 3 வெள்ளி கட்டிகள் இல்லாதது தெரியவந்தது. அதற்கு பதிலாக வெள்ளி பூசப்பட்ட போலியான 3 கட்டிகள் இருந்தது.
கோவிலுக்கு காணிக்கையாக வெள்ளி கட்டிகளை செலுத்திய பக்தர் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி வைத்திருந்த 6 குருக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பக்தர் தனது வேண்டுதலை சரியாக செலுத்தியது தெரியவந்தது. ஆனால் குருக்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர்.
இதனால் இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்படும் என்று கூறிய போது, பொறுப்பில் உள்ள குருக்கள், காணாமல் போன வெள்ளி கட்டிகளுக்கு பதிலாக புதிய வெள்ளி கட்டிகளை மீண்டும் வைத்துவிடுவதாக தெரிவித்தனர். இதன்படி ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் 1.6 கிலோ எடையுள்ள 3 வெள்ளி கட்டிகளை வாங்கி பெட்டகத்தில் வைத்தனர்.
இது குறித்து கோவில் இணை ஆணையர் திருமகள் கூறியதாவது,
காணாமல் போன வெள்ளி கட்டிக்கு பதிலாக புதிதாக வாங்கி தந்தால் அதை ஏற்க முடியாது. இது போன்ற திருட்டு சம்பவங்களை அனுமதிக்க முடியாது. திருடியவர்கள் யார் என்று தெரிய வேண்டும். இந்த திருட்டு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறேன் என்றார்.
இந்நிலையில் வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் சங்கரலிங்கம் வடபழனி கோவிலுக்கு நேற்று சென்று நேரடியாக விசாரித்தார். இது குறித்து புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.