மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதைக் கண்டித்து, தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக 2013-14ம் ஆண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தேர்வுக்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்டிருப்பதால், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் ஆபத்து உருவாகியிருக்கிறது.

இந்த நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படாத நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதால், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக இந்த நுழைவுத்தேர்வை எழுதியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் கிராமப்புற மற்றும் ஏழை-எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழகத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, 2007-08 முதல் தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது.

அதன்பிறகு தான் தமிழகத்தில் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளில் சேர முடிகிறது. இந்த நிலையில் மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், நகர்ப்புற பணக்கார மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை ஏற்படும். ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனி ஆகிவிடும்.

இந்த உண்மை புரியாமல் தேசிய அளவில் பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது சமூக நீதிக்கு எதிரானது என்பது மட்டுமின்றி மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் செயலும் ஆகும். தமிழகத்தில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இப்படி ஒரு நுழைவுத்தேர்வை அறிவிப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதற்கு சமமானதாகும்.

எனவே, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைக் கண்டித்து, தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+