கரூரில் தொடரும் பல மணிநேர மின்தடை- பொதுமக்கள் அவதி
கரூர் மாவட்டத்தில் தினமும் 14 முதல் 16 மணிநேரம் மின்தடை நீடித்து வருவதாக பொது மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பகல் நேரத்தில் 8 முதல் 10 மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் தொழிற்சாலைகள் சரியாக இயங்காமல், தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அலுவலக வேலை நேரங்களில் அதிகளவு மின்தடை ஏற்படுவதால், அரசு அலுவலகங்களில் முக்கிய பணிகள் முடங்கி உள்ளன. பத்திரவு பதிவு அலுவலகங்களில் ஆவணங்கள் சரிபார்ப்பது, பதிவு பணிகள், வில்லங்க சான்றுகள் போன்றவை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பத்திர பதிவுகள் முடங்கிவிடுகின்றன.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பித்தல், பதிவு நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் கம்ப்யூட்டர் மூலமாக நடைபெறுகிறது. மின் தடையால் இந்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீ்ட்டு வேலைகளை தகுந்த நேரத்தில் முடித்து, திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை அனுப்ப முடியவில்லை என்றும் குடும்ப தலைவிகள் கூறுகின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மின்விசிறி இயங்குவதில்லை. இதனால் பொது மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தொடர் மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கரூரில் ஆங்காங்கே திடீர் மறியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.