மத்திய அரசுக்கு ஆதரவு தொடருமா?: மாயாவதி நாளை முடிவு
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதா இல்லை என்பது குறித்து நாளை முடிவு செய்யப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இவர் ஆதரவு தராவிட்டால், வெறும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் தான் மத்திய அரசு காலம் தள்ள வேண்டி வரும். அப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயமும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்து, கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சமீபத்தில் வெளியேறிவிட்டது. இதனால் 19 எம்பிக்களை இழந்து மத்திய அரசு மைனாரிட்டி அரசாகிவிட்டது.
ஆனால், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந் நிலையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முலாயமும் மாயாவதியும் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மம்தாவோ அல்லது பாஜகவோ நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், முலாயமும் மாயாவதியும் அதை ஆதரித்துவிட்டால், மன்மோகன் சிங் அரசு வீட்டுக்குப் போக வேண்டியது தான்.
ஆனால், மம்தா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர மாட்டார், கொண்டு வந்தாலும் அதை முலாயமும் மாயாவதியும் ஆதரிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் ஏதாவது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த வண்ணம் உள்ளது.
இந் நிலையில் இன்று லக்னொவில் தனது கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தான் நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஏழைகள் மீதான சுமையை பணக்காரர்கள் மீது மாற்றிவிட வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் மத்தியில் ஊழலும் மலிந்துவிட்டது. 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் என ஊழல்கள் அதிகரித்துவிட்டன.
மத்திய அரசுக்கு ஆதரவு தருவதா இல்லையா என்பது குறித்து நாளை முடிவு செய்வேன். இப்போதுள்ள நிலையில் மத்தியில் விரைவிலேயே தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பகுஜன் கட்சியில் முலாயம் கட்சி போல குடும்ப ஆதிக்கம் இருக்காது. எனது உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மாட்டேன் என்றார்.
மாயாவதி மீது சிபிஐ போட்ட சில வழக்குகள் சமீபத்தில் தான் தள்ளுபடியாயின என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ அமைப்பை வைத்து மாயாவதியை மத்திய அரசு தனது வழிக்குக் கொண்டு வந்த நிலையில், இப்போது அவர் மீதான வழக்கு நெருக்கடிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தனது பேச்சின் மூலம் மாயாவதி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருவது தெளிவாகிறது. நாளை இவர் எடுக்கும் முடிவு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.












Click it and Unblock the Notifications