டோல் கேட்டில் ஐடி கார்டு கேட்டதற்கு துப்பாக்கி காட்டி மிரட்டிய எம்.பி-கேமராவில் சிக்கினார்
வடோதரா: டோல் கேட்டை கடக்க எம்.பி. அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டதற்கு, துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார் போர்பந்தரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டோல்கேட்டில் இருந்த கேமராவில் சிக்கிய அவர், இதற்கு வருத்தம் தெரிவிக்க மறுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.பி வித்தல் ரடடியா. நேற்று காரில் வடோதராவை அடுத்த கார்ஜன் என்ற கிராமத்தில் உள்ள டோல் கேட் வழியாக சென்றார். அப்போது டோல் கேட்டில் இருந்த பணியாளர்கள், அவரிடம் எம்.பி. அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு மறுத்த காங்கிரஸ் எம்.பி. தன்னிடம் இருந்து துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார்.
இது குறித்து டோல் கேட் பணியாளர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி, டோல் கேட்டிற்கு எம்.பி.யின் கார் வந்த போது, எம்.பி.யின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது கார் டிரைவர் எம்.பி. அடையாள அட்டையின் நகலை காட்டியுள்ளார்.
இதை ஏற்க மறுத்த டோல் கேட் பணியாளர்கள், உண்மையான எம்.பி. அடையாள அட்டையை காண்பிக்க கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த எம்.பி. காரில் இருந்த துப்பாக்கியுடன் இறங்கி சென்று, டோல் கேட் பணியாளர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
டோல் கேட்டில் இருந்த சிசிடிவி கேமராவில், வெள்ளை உடை அணிந்த எம்.பி. ஆக்ரோஷமாக துப்பாக்கியுடன் இறங்கி சென்று மிரட்டுவது பதிவாகி உள்ளது. எம்.பி. துப்பாக்கியுடன் இறங்கி சென்றதால், டோல் கேட்டில் நின்ற மற்ற வாகனங்களில் இருந்தவர்களும் பீதி அடைந்துள்ளனர்.
ஆனால் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தையும் மறுத்துள்ள காங்கிரஸ் எம்.பி., இதற்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார். டோல் கேட்டிற்கு வந்தவுடன் தனது காரை சுற்றிலும் 15 பேர் கூடி நின்றதால், தனது தற்காப்பிற்காக துப்பாக்கியுடன் காரில் இருந்து இறங்கியதாக தெரிவித்துள்ளார்.