இந்தோனேசியா- சிலி நாடுகளில் நிலநடுக்கம்: உயிரிழப்பு எதுவும் இல்லை
ஜகர்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியிலும், சிலியின் தலைநகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்தோனேசியா நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அருதீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவு பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. டோபோ என்ற கிராமத்தில் 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் சாலைகளில் குவிந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா கடற்பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்தில் கடல் அலைகள் எழுந்தது.
இதனால் லேசான அளவில் சுனாமி ஏற்படலாம் என்ற எச்சரிப்பு அளிக்கப்பட்டது. இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஆனால் நிலநடுக்கத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
சிலியில் நிலநடுக்கம்:
அதேபோல சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.சாண்டியாகோ நகரில் இருந்து 69 கி.மீ தொலைவில் 81.9 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 5.5 ரிக்டர் அளவு பதிவாகியதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். சிறிது நேரத்தில் சகஜநிலை திரும்பியதால் மீண்டும் வழக்கமான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இதில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.