புலிகள் தளபதி விநாயகம் கைது செய்யப்படவில்லை! - பிரெஞ்ச் போலீஸ்

விடுதலைப் புலிகளின் முத்த தளபதி பரிதி படுகொலை தொடர்பாக விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தளபதி பரிதி படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த கொலையில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரை தொடர்புபடுத்தி செய்தி வெளியானது.
இதற்கு விளக்கமளித்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு, "பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு எமது அமைப்பைத் தொடர்புபடுத்தி சில விஷமிகளால் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த எவருமே இக்கொலையோடு தொடர்புபடவில்லை என்பதையும் எமது அமைப்பைச் சேர்ந்த எவருமே பிரான்சில் கைது செய்யப்படவில்லை என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தெளிவுபடுத்துகின்றோம்," என தலைமைச் செயலக அறிக்கை தெரிவித்தது.
இந்த சூழலில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியான விநாயகத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல் வெளியானது.
இது பரிதியின் படுகொலையை வைத்து பரபரப்பு ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்கு புறம்பாக வந்துள்ள செய்தி என புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் போலீசும் இதனை மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications