கத்காரிக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா: பாஜக கடும் கண்டனம்
நிதின் கத்காரிக்கு எதிராக நீண்டகாலமாகவே பாஜகவில் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நிதின் கத்காரி மீது சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் குழு ஊழல் முறைகேடு புகார்களை சுமத்தியது. இதைத் தொடர்ந்து மூத்த பாஜக தலைவர் ஜெத்மலானியின் மகனும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான மகேஷ் ஜெத்மலானி, கத்காரி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கட்சிப் பதவியில் இருந்து விலகினார். அப்போது ராம்ஜெத்மலானியும் நிதின் கத்காரி பதவி விலக வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பாஜகவின் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்தது. ஆர்.எஸ்.எஸ். ஆலோசகர் ஆடிட்டர் குருமூர்த்தி தலையிட்டு பஞ்சாயத்து பேசி பிரச்சனையை சற்றே தணிக்க வைத்தார். இந்த கோரஷில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் இணைந்து கொண்டு கத்காரி ராஜினாமா செய்ய கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான யஷ்வந்த்சின்ஹாவும் நிதின் கத்காரிக்கு எதிராக கலகக் குரலை வெளிப்படுத்தியிருக்கிறார். 'நிதின் கத்காரி மீதான புகாரில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை. பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அதிருப்திகளுக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறியதுடன் கத்காரி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
யஷ்வந்த் சின்ஹாவின் இந்தக் கருத்து பாஜகவில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கட்சி விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக பேசுவது சரியல்ல என்றும் சின்ஹா தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.